snapdeal

Sunday, December 25, 2016

மயிலாப்பூரில், பட்டதாரி பெண் கொலை: தலைமறைவாக இருந்த வாலிபர் கைது



சென்னை, 
சென்னை மயிலாப்பூரில் லாட்ஜில் பட்டதாரி பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
லாட்ஜில் கொலை
சென்னை மயிலாப்பூர் வி.பி.கோவில் தெருவை சேர்ந்தவர் எத்திராஜ். இவரது மகள் நிவேதா (வயது 22). எம்.சி.ஏ. பட்டதாரி. திருமணம் ஆகாதவர். கடந்த 14–ந்தேதியன்று, மயிலாப்பூர் லஸ் கார்னர் பகுதியில் உள்ள லாட்ஜ் அறையில் நிவேதா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
அவரது கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்து பிணத்தை அறைக்குள் போட்டு பூட்டிவிட்டு கொலையாளிகள் தப்பி சென்றுவிட்டனர். இந்த படுகொலை வழக்கு சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நிவேதாவின் தந்தை எத்திராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் மயிலாப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
காதலன் கைது
போலீசார் விசாரணையில் கொலை நடந்த லாட்ஜ் அறையில் நிவேதாவுடன் 2 வாலிபர்கள் தங்கியிருந்தது தெரியவந்தது. அந்த வாலிபர்களில் ஒருவர் பெயர் சுரேஷ்குமார் (25). மதுரையை சேர்ந்தவர். அவர் நிவேதாவின் காதலர் ஆவார். நிவேதாவுடன் தங்கியிருந்த இன்னொரு வாலிபர் சுபாஷ் (33). இவர் மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்தவர்.
சுரேஷ்குமாரும், சுபாஷும் சேர்ந்து நிவேதாவை கொலை செய்துவிட்டு தப்பியோடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. நிவேதாவை கொலை செய்வதற்கு முன்பு இருவரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்திருப்பதும் தெரியவந்தது. கடந்த 17–ந்தேதி நிவேதாவின் காதலர் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டார். அவர் கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டு போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். தற்போது அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சுபாஷ் கைது
சுரேஷ்குமாரின் நண்பர் சுபாஷ் போலீஸ் கையில் சிக்காமல் தலைமறைவாக இருந்தார். அவரையும் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் சுபாஷ் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்ததாக தெரியவந்தது.
அவர் கொடுத்துள்ள வாக்குமூலத்தின் விவரம் வருமாறு:–
உல்லாசமாக இருக்க திட்டம்
சுரேஷ்குமார் நிவேதாவை உண்மையாக காதலிக்கவில்லை. ஆனால் நிவேதா சுரேஷ்குமார் தன்னை உண்மையாக காதலிப்பதாக நம்பினார். சுரேஷ்குமார் தன்னை திருமணம் செய்துகொள்வார் என்று நம்பிக்கையில் நிவேதா அவருடன் நெருக்கமாக பழகிவந்தார். நிவேதாவை உல்லாசம் அனுபவிக்கலாம் என்று சுரேஷ்குமாரும், நானும் திட்டமிட்டோம்.
இதற்காக அவரை மதுரைக்கு அழைத்தோம். ஆனால் நிவேதா மதுரை வர மறுத்துவிட்டார். இதனால் சென்னைக்கு வந்து நிவேதாவை அனுபவிக்கலாம் என்று திட்டமிட்டோம். திட்டமிட்டபடி மயிலாப்பூரில் லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கினோம்.
தீர்த்து கட்டினோம்
நான் உடனிருந்தால் நிவேதா உல்லாசத்துக்கு சம்மதிக்க மாட்டார் என்பதால் நான் லாட்ஜ் அறையை விட்டு வெளியே போய்விட்டேன். சுரேஷ்குமாரும், நிவேதாவும் மட்டும் அறையில் தனியாக இருந்து முதலில் படுக்கையை பகிர்ந்து கொண்டனர். நான் திடீரென்று வந்து அறைக்கதவை தட்டினேன். சுரேஷ்குமாரும் கதவை திறந்துவிட்டு விட்டார். அப்போது நிவேதா கட்டிலில் அரைகுறை ஆடையுடன் படுத்திருந்தார்.
என்னை பார்த்தவுடன் வெளியே தப்பியோட முயற்சித்தார். அவரை வெளியே போகவிடாமல் நானும் பலாத்காரம் செய்தேன். அவரை வெளியே விட்டால் போலீசில் காட்டி கொடுத்துவிடுவார் என்று பயந்தோம். இதனால் அவரை தீர்த்துக்கட்டிவிட்டு தப்பியோடி விட்டோம்.
இவ்வாறு சுபாஷ் தனது வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
சுபாஷ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.





No comments:

Post a Comment

FREE DOWNLOAD