துப்பட்டாவை பிடித்து இழுத்து பெண் என்ஜினீயரை கேலி செய்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது||Dupatta-pulledThe-girl-made-fun-of-engineers--College
தாம்பரம்,
துப்பட்டாவை பிடித்து இழுத்து பெண் என்ஜினீயரை கேலி செய்ததாக கல்லூரி மாணவர்கள் 3 பேரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
துப்பட்டாவை இழுத்து கிண்டல்
கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த 23 வயது பெண் சாப்ட்வேர் என்ஜினீயர் ஒருவர், சென்னை தாம்பரத்தை அடுத்த கடப்பேரி பகுதியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு அந்த பெண் என்ஜினீயர், தனது ஆண் நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் பல்லாவரத்தில் உள்ள ஓட்டலில் சாப்பிட சென்றார். பல்லாவரம் பஸ் நிலையம் அருகே ஜி.எஸ்.டி. சாலையில் சென்ற போது, மோட்டார் சைக்கிளில் இவர்களை பின்தொடர்ந்து வந்த 3 வாலிபர்கள், பெண் என்ஜினீயரை கேலி செய்து, அவரது துப்பட்டாவை பிடித்து இழுத்தனர்.
கல்லூரி மாணவர்கள் கைது
இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள், 3 வாலிபர்களையும் மடக்கி பிடித்து, பல்லாவரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரித்தனர். அதில் அவர்கள், ஒரத்தநாடு கிரையூர் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த்(20), பட்டுக்கோட்டை கரிக்காடு கிராமத்தைச் சேர்ந்த அருண்(20) மற்றும் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த அஜீஸ்குமார்(19) என்பது தெரிந்தது.
இவர்களில் அரவிந்த், தனியார் கல்லூரில் ஓட்டல் மேனேஜ்மென்ட்டும், அருண் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி முதலாம் ஆண்டும், அஜீஸ்குமார் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் 2–ம் ஆண்டும் படித்து வருவது தெரிந்தது. கைதான கல்லூரி மாணவர்கள் 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment