சென்னை,
சென்னையில், 3 மகள்கள் மற்றும் மனைவியை படுகொலை செய்த 2-வது கணவர் கைது செய்யப்பட்டார். போலீசில் அவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
3 மகள்களுடன் வசித்த பெண்
சென்னை ராயப்பேட்டை முத்துமுதலி தெருவிலுள்ள அடுக்குமாடி ஒன்றில், வாடகை வீட்டில் முதல் மாடியில் வசித்து வந்தவர் சின்னராஜ் (வயது 35) இவர் இனிப்பு பலகாரங்கள் செய்வதில் நிபுணர். சென்னையிலுள்ள பல்வேறு பேக்கரிகளுக்கு சென்று இனிப்பு பலகாரங்கள் செய்து கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.
பட்டினப்பாக்கத்திலுள்ள ஒரு பேக்கரிக்கு நிரந்தரமாக இனிப்பு பலகாரங்கள் செய்து கொடுத்து வந்தார். இவரது மனைவி பெயர் பாண்டியம்மாள் (38). பாண்டியம்மாளுக்கு சின்னராஜ் 2-வது கணவர் ஆவார்.
முதல் கணவர் பிரிந்து சென்றுவிட்டார். முதல் கணவர் மூலம் பாண்டியம்மாளுக்கு பவித்ரா (19), பரிமளா (18), சினேகா (16) ஆகிய 3 மகள்கள் உள்ளனர். பவித்ரா பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்து வந்தார். 2-வது மகள் பரிமளா தற்போது என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் முதலாண்டு பட்டப்படிப்பிற்கு சேர்ந்திருந்தார். 3-வது மகள் சினேகா பிளஸ்-1 மாணவி. பாண்டியம்மாள் மற்றும் அவரது 3 மகள்களுடன் சின்னராஜ் ஒரே வீட்டில் வசித்தார். அவர் வசித்த வீடு மிகவும் சிறிய வீடாகும்.
வீட்டில் துர்நாற்றம்
நேற்று முன்தினம் காலையில் சின்னராஜ் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. சின்னராஜ் வீட்டின் கதவை பூட்டிவிட்டு வெளியில் புறப்பட்டார். வீட்டின் உரிமையாளர் ராஜா பகதூர் வெளியில் கிளம்பிய சின்னராஜூவிடம் “உங்கள் வீட்டில்இருந்து துர்நாற்றம் வீசுகிறதே” என்றார்.
அதற்குப் பதிலளித்த சின்னராஜ் வீட்டிற்குள் எலி செத்து கிடந்ததாகவும், அதனால் துர்நாற்றம் வீசுகிறது என்றும், தெரிவித்தார்.
மனைவி, மகள்கள் சொந்த ஊருக்குப் போயிருக்கிறார்கள் என்றும், சின்னராஜ் தெரிவித்தார். பின்னர் அவர் தனது ஸ்கூட்டரில் வெளியில் புறப்பட்டு சென்றுவிட்டார்.
பூட்டிய வீட்டிற்குள் 4 பிணங்கள்
வெளியில் சென்ற சின்னராஜ் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை வீடு திரும்பவில்லை. வீடு பூட்டிய நிலையிலேயே இருந்தது. ஆனால் வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் அதிகமாக இருந்தது. இதனால் வீட்டு உரிமையாளர் சந்தேகப்பட்டார். ராயப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு இதுகுறித்து தகவல் கொடுத்தார்.
உடனே துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில், உதவி கமிஷனர் சங்கர், போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகுரு ஆகியோர் போலீஸ் படையுடன் விரைந்து வந்தனர். பூட்டிக் கிடந்த சின்னராஜின் வீட்டின் கதவை உடைத்தனர். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது கடும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு பாண்டியம்மாளும், அவரது 3 மகள்களும் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தனர். 4 பேரின் பிணங்களும் அழுகிய நிலையில் காணப்பட்டன.
4 பேரும் படுகொலை
பாண்டியம்மாளும், அவரது 3 மகள்களும் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தனர். சின்னராஜ்தான் அவர்கள் 4 பேரையும் கொலை செய்துவிட்டு தப்பி சென்றிருக்க வேண்டும் என்று போலீசார் கருதினார்கள். சின்னராஜை பிடிக்க போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்கள்.
பாண்டியம்மாள் மற்றும் அவரது 3 மகள்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சின்னராஜை போலீசார் தேடினார்கள்.
அவர் பயன்படுத்திய சிகப்பு நிற ஸ்கூட்டர் பட்டினப்பாக்கத்திலுள்ள பேக்கரி முன்பு அனாதையாக நின்றது. ஸ்கூட்டரை போலீசார் கைப்பற்றினார்கள். சின்னராஜை தொடர்ந்து தேடினார்கள். அவர் மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் அருகே படுத்திருந்தார். அவரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
பரபரப்பு வாக்குமூலம்
மனைவி மற்றும் 3 மகள்களை கொடூரமாக கொலை செய்தது எப்படி என்றும், எதற்காக அவர்களை கொலை செய்தார் என்பதை பற்றியும், சின்னராஜ் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். அவரது வாக்குமூலம் விவரம் வருமாறு:-
எனது சொந்த ஊர் கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் . பாண்டியம்மாள் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்தார். அவரது சொந்த ஊர் காரைக்குடி.
கணவர் பிரிந்த நிலையில் அவர் பழனியில் பிளாட்பாரத்தில் இட்லி வியாபாரம் செய்துவந்தார். நான் பழனிக்கு சாமி கும்பிட சென்றபோது பாண்டியம்மாளிடம் பழக்கம் ஏற்பட்டது. பாண்டியம்மாள் 3 மகள்களுக்கு தாயாக இருந்தாலும், அவரை விரும்பினேன். எனக்கும், அவருக்கும் 3 வயது வித்தியாசம் இருந்தாலும் அவரை திருமணம் செய்ய ஆசைப்பட்டேன்.
மகள்கள்போல வளர்த்தேன்
எனது விருப்பத்தை தெரிவித்தபோது பாண்டியம்மாள் முதலில் தயங்கினார். உங்கள் 3 மகள்களையும் எனது மகள்களைப் போல பாசம் காட்டி வளர்ப்பேன் என்றும், அவர்களை நல்லபடியாக படிக்கவைப்பேன் என்றும் பாண்டியம்மாளிடம் சத்தியம் செய்தேன். அதன்பிறகு பாண்டியம்மாள் என்னை திருமணம் செய்ய சம்மத்தித்தார். இருவரும் பழனி முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டோம்.
கடந்த 2011-ம் ஆண்டு எங்களுக்கு திருமணம் நடந்தது. 2012-ம் ஆண்டு நாங்கள் சென்னைக்கு வந்தோம். தற்போதுள்ள வீட்டில் இனிமையாக குடும்பம் நடத்தி வந்தோம். நான் சத்தியம் செய்து கொடுத்தபடி பாண்டியம்மாளின் 3 மகள்களையும் எனது மகள்களைப் போலவே பாசத்தைக் கொட்டி வளர்த்தேன். நன்றாக படிக்கவும் வைத்தேன். நான் செய்துவந்த இனிப்பு பலகாரங்கள் தொழிலில் நல்ல வருமானம் கிடைத்தது. வேறு பெரிய வீட்டிற்கு வாடகைக்குப் போகலாம் என்று திட்டமிட்டோம்.
மூத்த மகள் மீது ஆசை
நாங்கள் வசித்த வீடு மிகவும் சிறியது என்பதால் அந்த வீட்டில் நாங்கள் 5 பேரும் இரவில் தூங்குவது சிரமமாக இருந்தது. பாண்டியம்மாளோடு இரவில் உறவு வைத்துக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. 3 மகள்கள் அருகில் படுத்து இருப்பதால், பாண்டியம்மாள் உறவுக்கு வர மறுப்பார். இந்த பிரச்சினையால் எனக்கும், பாண்டியம்மாளுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டது. இதற்கிடையில் கர்ப்பப்பையில் பிரச்சினை ஏற்பட்டதால் பாண்டியம்மாள் என்னோடு உறவு வைத்துக் கொள்ள முற்றிலுமாக மறுத்துவிட்டார்.
இந்த நேரத்தில்தான் எங்கள் வாழ்க்கை தடுமாற்றமாகி தடம் புரண்டது. உறவுக்கு ஏங்கிய நான் பாண்டியம்மாளின் மூத்த மகளின் மீது மனதில் ஆசையை வளர்க்க ஆரம்பித்தேன்.
வீட்டிற்குள் அனுமதி மறுப்பு
உன்னால் என்னோடு மனைவியாக வாழ முடியவில்லை, எனவே உனது மூத்தமகளை எனக்கு திருமணம் செய்து கொடுத்துவிடு, நாம் எப்போதும்போல சந்தோஷமாக வாழ்வோம், என்று பாண்டியம்மாளிடம் தெரிவித்தேன். ஆனால் எனது விருப்பத்தை ஏற்க பாண்டியம்மாள் மறுத்துவிட்டாள். அதோடு நிற்காமல் இரவில் என்னை வீட்டிற்குள் தூங்குவதற்கும் அனுமதிக்கவில்லை. நான் வீட்டிற்கு வெளியில்தான் தூங்கினேன். சில நேரங்களில் விரக்தி ஏற்பட்டு இரவு நேரத்தில் மெரினா கடற்கரைக்கு போய் படுத்து தூங்குவேன்.
எப்படியாவது பாண்டியம்மாளின் மூத்த மகளை அடைந்தே தீர்வது என்று முடிவு செய்தேன். அந்த ஆசை எனது மனதில் கொழுந்துவிட்டு எரிந்தது. அந்த விபரீத ஆசையோடு நான் இருந்தபோது கடந்த திங்கட்கிழமை அன்று இரவு வழக்கம்போல பாண்டியம்மாள் என்னை வீட்டிற்கு வெளியே படுக்க வைத்துவிட்டார்.
உறவுக்கு முயன்றபோது...
நள்ளிரவில் எனக்கு ஆசை அதிகமானது, அதற்கு வசதியாக பாண்டியம்மாள் கதவை திறந்துபோட்டு விட்டு தூங்கிவிட்டார். எனவே வீட்டிற்குள் நைசாக புகுந்து பாண்டியம்மாளின் மூத்த மகள் பவித்ராவோடு உறவுக்கு முயன்றேன். இதை அருகில் படுத்திருந்த பாண்டியம்மாள் பார்த்துவிட்டு சண்டைபோட்டார். உடனே வீட்டில் இருந்த சிறிய உலக்கையால் பாண்டியம்மாளின் தலையில் ஓங்கி அடித்தேன்.
அவர் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்துவிட்டார். இதைப் பார்த்த பாண்டியம்மாளின் மூத்த மகள் பவித்ரா கூச்சல் போட முயன்றார்.
இதனால் பவித்ராவின் தலையிலும் உலக்கையால் அடித்தேன். அவளும் சுருண்டு விழுந்தார்.
அந்த நிலையிலும் எனக்குள் எரிந்துகொண்டிருந்த காம தீயானது அடங்கவில்லை. தூங்கிக் கொண்டிருந்த பாண்டியம்மாளின் 2-வது மகள் பரிமளாவோடு உறவு வைக்க முயன்றேன். அவளும் விழித்துக்கொண்டு சத்தம்போட்டாள். இதனால் பரிமளாவையும் உலக்கையால் தாக்கினேன். அவளும் ரத்த வெள்ளத்தில் வீழ்ந்தாள். இதைப்பார்த்து 3-வது மகள் சினேகா கூச்சல்போட்டாள். அவளை அயன்பாக்சின் வயரால் கழுத்தை இறுக்கி மூச்சை அடக்கினேன்.
4 பேரும் சாவு
பாண்டியம்மாளும், அவரது 3 மகள்களும் இறந்துபோனார்கள். நான் சத்தியத்தை மீறி அவர்கள் 4 பேர் சாவுக்கும் எமனாகிவிட்டேன். கொலைப்பழியில் எப்படி தப்பிப்பது என்று யோசித்தேன். என்ன செய்வது என்று தெரியவில்லை. இதனால் இரவு அங்கேயே 4 பேரின் பிணங்களோடு தூங்கிவிட்டேன்.
அடுத்து செவ்வாய்க்கிழமை அன்று இரவும், புதன்கிழமையன்று இரவும் பிணங்களோடு தூங்கினேன். வியாழன்று காலையில் 4 பேரின் பிணங்களும் அழுகி துர்நாற்றம் வீச ஆரம்பித்தது. துர்நாற்றம் வீசுவதை தடுக்க 4 பேரின் உடல்களிலும் பினாயிலை தெளித்தேன்.
நிர்வாணமாக்கினேன்
4 பேரின் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கினேன். கொலைப்பழியை இன்னொரு நபர்மீது சுமத்த திட்டமிட்டேன்.
4 பேரையும் கற்பழிக்க முயற்சி செய்தநபர் பின்னர் அவர்களை கொன்றுவிட்டான் என்று போலீசாரிடம் நாடகமாடி தப்பிக்கலாம் என்று முடிவு செய்தேன்.
ஆனால் அந்த திட்டத்தை என்னால் சரிவர நிறைவேற்ற முடியவில்லை. உடல்கள் அழுகி துர்நாற்றம் வீசியதால், கொலைப்பழியில் இருந்து நான் போட்ட தப்பிக்கும் திட்டமும் தவிடுபொடியானது. இதனால் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து வீட்டை பூட்டிவிட்டு மெரினா கடற்கரைக்குச் சென்றேன்.
கடலில் குதித்து தற்கொலை செய்யவும் எனக்கு துணிச்சல் வரவில்லை. இதனால் கடற்கரையிலேயே தொடர்ந்து படுத்திருந்தேன். அப்போது போலீசார் என்னை பிடித்துவிட்டனர். எனது விபரீதமான, கொடூரமான தகாத ஆசையால் 4 பேரையும் கொன்று பாவியாகிவிட்டேன்.
இவ்வாறு சின்னராஜ் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறைக்கு அனுப்புவோம் என்று போலீசார் தெரிவித்தனர்.
நவீன கம்ப்யூட்டர் சாப்ட்வேர் மூலம் சின்னராஜின் ஸ்கூட்டரின் கலர் மற்றும் நம்பரை வைத்து அது நிறுத்தப்பட்டுள்ள இடத்தை அடையாளம் கண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
வீடியோவில் பதிவு
4 பேரையும் கொன்றது எப்படி என்று சின்னராஜ் போலீசாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்தான் கொலையாளி என்பதற்கு அவர் வசித்த வீட்டின் உரிமையாளர் சாட்சியம் அளித்துள்ளார். அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களின் சாட்சியங்களையும் போலீசார் திரட்டினார்கள்.
மேலும் சின்னராஜ் தானாக முன்வந்து மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் கொலையை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுக்கவும் போலீசார் ஏற்பாடு செய்து வருகிறார்கள். இதன் மூலம் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து சின்னராஜூக்கு கோர்ட்டில் கடுமையான தண்டனை வாங்கிக் கொடுக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
வாழ வேண்டிய 3 அப்பாவி இளம் பெண்களையும், தன்னை நம்பி வந்த பாண்டியம்மாளையும் தனது காம தீக்கு பலியாக்கிய சின்னராஜ் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் ராயப்பேட்டை பகுதி பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
News source dailythanthi
No comments:
Post a Comment